சோழவரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
செங்குன்றம் அருகே காட்டூர் செல்வி நகரைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் சதீஷ் (15). செங்குன்றத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் இருந்து சென்ற சதீஷ் இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சதீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் தேடியுள்ளனர். இந்நிலையில், ஆத்தூர்-எருமைவெட்டிப்பாளையம் சாலையில் செம்மண் எடுப்பதற்காக தோண்டப்பட்டிருக்கும் குட்டையில் சிறுவனின் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சோழவரம் போலீஸார் செங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் குட்டை நீரில் இறந்து கிடந்த சிறுவனை மீட்டனர். போலீஸார் விசாரணையில், அச்சிறுவன் விஜயகுமாரின் மகன் சதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சதீஷின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில், நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சதீஷ், குட்டையில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சோழவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.