பூண்டி ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், வளர் இளம் பெண்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து கண்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சத்துணவை வலியுறுத்தும் வகையில், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் கேத்ரின் காடிலியா தலைமை வகித்தார். இதில், அங்கன்வாடி பணியாளர்கள் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, ஊட்டச்சத்து தரும் பழங்கள், காய்கறிகள், சத்தான தானிய உணவு வகைகள் ஆகியவற்றை கண்காட்சியில் இடம் பெறச் செய்திருந்தனர்.
முன்னதாக, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகியோர் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தப்பட்டது.