மக்களவைத் தேர்தலுக்காக, வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது, வேட்பாளருடன் சேர்த்து 4 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியது: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல்
18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய
26-ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து, வரும் 27-ஆம் தேதி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
இதில், பொதுப் பிரிவில் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகை ரூ. 25 ஆயிரமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தனித் தொகுதியில் போட்டியிடுவோர் ரூ. 12,500-ஐ டெபாசிட்டாகவும் செலுத்த வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது, வேட்பாளர், உடன் வருவோருக்கு, 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன்
4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். வேட்பு மனு படிவத்தை மிகவும் சரியான முறையில் அதற்கான விவரங்களையும், சொத்து விவரப்பட்டியலையும் அளிக்க வேண்டும். மேலும், வேட்பு மனு தாக்கலின்போது, பத்திரிகையாளர்கள் அனைவரையும் அனுமதிக்கவோ அல்லது குறிப்பிட்ட அளவில் அனுமதிக்கவோ மாவட்டத் தேர்தல் அலுவலர் முடிவு செய்து கொள்ளலாம்.