கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி அருகே உள்ள பெருமாள்குப்பம், போந்தவாக்கம், சின்னம்பேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்லிகான் பிரிக்சன் சிஸ்டம் நிறுவனம், தேசிய வேளாண் நிறுவனம் ஆகியவை சார்பில் நீர் மற்றும் வேளாண் மேம்பாட்டுத் திட்டம் பெருமாள்குப்பம், போந்தவாக்கம், சின்னம்பேடு ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடைக்காலம், போதிய மழையின்மை போன்ற காரணங்களால் தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விவசாயத்தில் அதிக மகசூல் பெறவும் சொட்டுநீர்ப் பாசனத்தை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விவசாயிகளுக்கு களப்பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய வேளாண் நிறுவனத்தின் இணை இயக்குநர் விஸ்வலிங்கம் சொட்டு நீர்ப் பாசனத்தின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். தேசிய வேளாண் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன், நீரில் கரையும் உரங்கள் பற்றி விளக்கினார்.
லேட்ரோ சொட்டு நீர்ப் பாசன நிறுவனத்தின் கோட்ட மேலாளர் டேவிட் குமார், சொட்டு நீர்ப் பாசனத்தைப் பராமரிக்கும் முறைகள் குறித்து விவசாயி மணிகண்டனின் நிலத்தில் நேரடியாக செயல்விளக்கம் செய்து காட்டினார்.
நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், முன்னோடி விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோழவரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் சொ.பாபு, முதன்மைச் செயல் அதிகாரி மோகன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.