திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் கும்மிடிப்பூண்டியில் பணியாற்றவுள்ள மண்டலத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தை செயல்படுத்துவது குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 330 வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் 26 மண்டல அலுவலர்கள் அடங்கிய குழுவினருக்கு, இப் பயிற்சி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு, தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியில், 26 மண்டலக் குழுக்களைச் சேர்ந்த 78 அலுவலர்கள் பங்கேற்றனர். இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, விவிபிஏடி என்கிற, எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்துடன் இணைக்கும் முறை, வாக்களித்த சின்னம் குறித்த ஒப்புகைச் சீட்டைப் பெறும் முறை குறித்தும், தேர்தலுக்கு முன்பு வாக்களிக்கும் இயந்திரத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இப்பயிற்சியைத் தொடர்ந்து, 330 வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, அடுத்தகட்ட பயிற்சி பின்னர் நடத்தப்படும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு தெரிவித்தார்.