பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் தருவதாகக் கூறி ரூ.4 கோடி வரை மோசடி செய்த பட்டாபிராமைச் சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் அருகே உள்ள புங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் இளங்கோவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஏ.எல்.அர்ஜுன்(45), பங்கு வர்த்தக முதலீடுகளை வாங்கி விற்பனை செய்து வரும் இடைத்தரகராகப் பணியாற்றி வந்தார். அவர் திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட புங்கத்தூரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதால் அங்குள்ள பொதுமக்களிடம் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து சென்னை மயிலாப்பூரில் வி.எம். என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் பணம் பெற்று அதை பங்கு வர்த்தகம், வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து வருவதாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இதுபோன்ற பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வோருக்கு ஓராண்டில் இருமடங்காக வழங்குவதாகக் கூறினார்.
இந்த ஆசை வார்த்தையை நம்பி இப்பகுதியில் உள்ள ஒவ்வொருவரிடமும் கடந்த 2017 முதல் குறைந்தது ரூ.1லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கினர். இதேபோல், இப்பகுதியில் மட்டும் 62 பேரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பணத்தைச் செலுத்தியுள்ளனர். இதில் ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை கொடுத்தார். மற்ற நபர்களுக்கு அர்ஜுன் கடந்த ஓராண்டாக பணம் தராமல் காலதாமதம் செய்தார். மேலும், மீண்டும் பணம் கொடுத்தோர் நேரில் பட்டாபிராம் சென்று அர்ஜுன் வீட்டிற்கு சென்றனர். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் தலைமறைவானது தெரிய வந்தது.
எனவே, ரூ.4 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்து, தலைமறைவான அர்ஜுன் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளனர்.