அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி பா.ம.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு,ஆர்.கே,பேட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக ஏ.கே. மூர்த்தி போட்டியிடுகிறார். அவர் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை ஒன்றியங்களில் புதன்கிழமை கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அறிமுகக் கூட்டங்களில் பங்கேற்றார். திருத்தணி நகர அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரச் செயலாளர் டி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். திருத்தணி ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை எ. ரவி வரவேற்றார். அதிமுக கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., தேமுதிக, த.மா.கா., புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ.அரி, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகியோர் பா.ம.க. வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தனர். பொதட்டூர்பேட்டையில் பேரூர் அதிமுக செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிப்பட்டு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.டி.சீனிவாசன் தலைமை வகித்தார்.
அறிமுகக் கூட்டங்களில் மாவட்ட தேமுதிக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆவின் பால்வள மாவட்டத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்கள் சாந்திபிரியா சுரேஷ், ஜெயராமன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.