ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 4 குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து ஆசிரியர்கள் புதன்கிழமை வரவேற்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சுபாஷினி தலைமை வகித்தார். இதில், கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளிக்குத் தேவையான பிரிண்டர், இருக்கைகள், வெள்ளைத் தாள், சாக்பீஸ், மின்விசிறி, பாய், தண்ணீர் டிரம், சில்வர் தவளை உள்ளிட்ட
ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைச் சேகரித்தனர்.
அந்த சீர்வரிசைப் பொருள்களுடன் மங்கள வாத்தியங்களை இசைத்தபடி பொதுமக்கள் ஊர்வலமாகப் பள்ளிக்கு வந்து 4 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் சேர்த்தனர். பள்ளி சார்பில் ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
உதவி ஆசிரியர்கள் மணிமேகலை, சீனிவாசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கோமதி உள்பட கிராம பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.