மாதவரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
அம்பத்தூர் பழைய நகராட்சி சாலையைச் சேர்ந்த மோகன்குமாரின் மகன் ராகுல் (18), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவருடைய சகோதரர் கௌதம் (17), மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்.
சகோதரர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செங்குன்றத்தில் இருந்து மூலக்கடை நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தனர். மாதவரம் மேம்பாலம் அருகே சாலையில் சென்றபோது அதே திசையில் வந்த லாரி அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் ராகுல் காயங்களுடன் உயிர்தப்பினார்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.