மனைவி கொலை: இளைஞர் கைது

குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து விட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.


குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து விட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தணி கார்த்திகேயபுரம் கௌரி அம்மன் நகரைச் சேர்ந்த கஜேந்திரனின் மகன் துர்கான்(28). அவர், ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச்  சேர்ந்த சிவப்பிரியா(25) என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். 
இந்நிலையில் அவர்களிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சிவப்பிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் துர்கான் தெரிவித்தார். எனினும், சிவப்பிரியாவின் தாய் சுஜாதா, தன் மகளின் இறப்பில் மர்மம் உள்ளது என திருத்தணி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, துர்கானிடம் விசாரணை நடத்தியபோது, சிவப்பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார். விசாரணையில் துர்கான் கூறியது: 
சிவப்பிரியாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அவர் அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று முதல் கணவர் மற்றும் குழந்தைகளைப் பார்த்து வந்தார். இது எனக்குப் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று, தாய் வீட்டிற்கு செல்லக் கூடாது என சிவப்பிரியாவைக் கண்டித்தேன்.
இதனால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்து, தலையணையால் சிவப்பிரியா முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன். அப்போது என்னுடன், நண்பர் லோகேஷ்(25) இருந்தார். அவர் கொடுத்த யோசனைப்படி சிவப்பிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினேன் என்று துர்கான், விசாரணையில் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமும், லோகேஷிடமும் அவர்கள் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com