சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் உள்ள அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் செல்லிடப்பேசி திருட முயன்றவரை பயணிகள் பிடித்து ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் அவசரமாக கீழே இறங்கும்போது மர்ம நபர்கள் செல்லிடப்பேசிகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் அனுப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தபோது இளைஞர் ஒருவர், ரயில் பயணியின் சட்டைப் பையில் இருந்து செல்லிடப்பேசியை எடுக்க முயன்றார்.
பயணிகள்அந்த இளைஞரைப் பிடித்து அனுப்பம்பட்டு ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தை அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நரேந்திரன்(22) என்று தெரிய வந்தது.