கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக மலேரியா தினத்தையொட்டி, உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கான "மலேரியா ஒழிப்பு என்னிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் விதமாக ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வட்டார சுகாதார கண்காணிப்பாளர் முருகதாஸ் வரவேற்றார். மருத்துவர் தென்றல், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் முரளிகிருஷ்ணன், சம்பந்தன், முரளிதரன், சுகுமார், நேசமுரளி, புள்ளியியலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் கோவிந்தராஜ் பேசுகையில், மலேரியாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், 3 நாளைக்கு மேல் யாரும் அவரவர் வீட்டில் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது, தண்ணீர் தொட்டிகளை துணிகளால் கட்டி மூட வேண்டும், மலேரியா கொசு இரவு நேரத்தில் மட்டுமே தாக்கும் என்பதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் கொசு வலைகளைப் பயன்படுத்த வேண்டும், 3 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் நோயாளியை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றார்.