புழல் ஏரிக்கரையில் காதல் ஜோடியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
செங்குன்றம் காமராஜர் நகர் நேதாஜிதெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரனும் (23) அவர் காதலிக்கும் பெண்ணும் புழல் ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் இரு நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அப்பெண் அணிந்திருந்த நகை, பணம், செல்லிடப்பேசியை பறித்தனர். இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து, வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் புழல் அண்ணா நினைவு நகரைச் சேர்ந்த சுபாஷ்(25), புழல் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (26) என்பது தெரிய வந்தது.
அவர்களில் சுபாஷ், பெரம்பூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றுவதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி மற்றும் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.