தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் எனக்கோரி திருத்தணியில் புதன்கிழமை வீடு வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை ஆசிரியர்,பெற்றோர் மற்றும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் எழிலரசு தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் குமரவேல் வரவேற்றார்.
திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலர் பாபு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் பாபு பேசுகையில், அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடை, பாடப் புத்தகம், பை, கணித உபகரணங்கள் உள்பட, 16 வகையான பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முதலே இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியும் கற்பிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைத் தவிர்த்து, கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு முன்வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஆசிரியர் இந்திரசேனன் உள்பட ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.