பழவேற்காடு கலங்கரை விளக்கத்தை பார்க்க அனுமதி ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
By DIN | Published On : 16th May 2019 04:20 AM | Last Updated : 16th May 2019 04:20 AM | அ+அ அ- |

சுற்றுலாத்தலமான பழவேற்காட்டில் உள்ள கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
பொன்னேரி வட்டத்தில், கடலோரப் பகுதியாக விளங்கும் பழவேற்காடு, 500 ஆண்டுகால வரலாறு கொண்ட பழைமைவாய்ந்த நகரமாகும். இங்குள்ள சுற்றுலாத்தலமான ஜெலிடியா கோட்டை, டச்சு கல்லறைகள், பழைமைவாய்ந்த மசூதிகள், தேவாலயங்கள் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருள்கள், படகுத் துறை, நிழல் கடிகாரம், பறவைகள் சரணாலயம், இயற்கை எழில் கொண்ட நீண்ட அழகிய கடற்கரை மற்றும் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. பழவேற்காடுக்கு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கலங்கரை விளக்க வளாகத்தை சுற்றுலாப் பயணிகள் மாலை 3 முதல் 5 மணி வரை பார்வையிட அனுமதி இருந்தது. இந்நிலையில், இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக இங்குள்ள கலங்கரை விளக்கத்தின் வளாகத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பழவேற்காடுக்கு சுற்றுலா வரும் பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.