வங்கியில் சர்வர் கோளாறு: வாடிக்கையாளர்கள் அவதி
திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் புதன்கிழமை ஏற்பட்ட சர்வர் பழுதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இந்த வங்கிக் கிளையில் கிளையில் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கான கடன், கல்விக் கடன், நகைக்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்கள் மற்றும் சேமிப்புக் கணக்கு என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
புதன்கிழமை இந்த வங்கிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வங்கி கவுன்ட்டர் முன்பு காத்திருந்தனர்.
இந்நிலையில், மதியம் 12 முதல் மாலை 3 மணி வரை வங்கியில் சர்வரில் கோளாறு ஏற்பட்டது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.