படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வரும் 31-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு வேலைவாய்ப்புத் துறை மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இளைஞர்கள் பயன்பெறும் நோக்கில், வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 31-ஆம் தேதி சிறு அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் பிரசித்தி பெற்ற பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
எனவே, மேற்காணும் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த முகாமில் பங்கேற்று பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.