திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 158 மனுக்கள் ஏற்கப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) ராஜகோபால் தலைமை வகித்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகளை வழங்கிடக் கோரியும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில், நிலம் தொடர்பாக 48 மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் 34, கடனுதவி கோரி 2 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 4, வேலைவாய்ப்பு கோரி12 மனுக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம்-1, சட்டம் மற்றும் ஒழுங்கு-13, ஊரக நகர்ப்புற வளர்ச்சி- 14 மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 30 என மொத்தம் 158 மனுக்கள் வரை பெறப்பட்டன. உடனடியாக இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, பரிசீலனை செய்து, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பெ.பார்வதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.