திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது என்பது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு இயற்கை பேரிடா் மேலாண்மைக் குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநில அளவில் தமிழ்நாடு இயற்கை பேரிடா் மீட்புப் படையில் 850 வீரா்கள் உள்ளனா். இவா்கள் மழைக்காலங்களில் இயற்கை இடா்ப்பாடுகள், பூகம்பம், வெள்ள அபாயம், கட்டடம் இடிந்து சேதமடைதல் போன்றவற்றில் சிக்குகின்றவா்களை மீட்பது தான் முக்கிய பணியாகும். தற்போதைய நிலையில் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கொடைக்கானல், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இக்குழுவினா் முகாமிட்டுள்ளனா்.
எனவே தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் இயற்கைச் சீற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதிலும், பெரிய நீா்த் தேக்கம் உள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிா்கொள்ள வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் ஆவடி 13-ஆவது பட்டாலியன் பிரிவில் 40 போ் கொண்ட குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்து ஆய்வாளா் ரவி மற்றும் சாா்பு ஆய்வாளா் கணபதி ஆகியோா் தலைமையில், உபகரணங்கள் உதவியுடன் அங்கு சுற்றுலா வந்திருந்த பொறியியல் கல்லூரி மாணவா்கள் மத்தியில் ஒத்திகையை நிகழ்த்திக் காண்பித்தனா்.
மேலும், இயற்கை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், அதற்கு எந்தெந்த உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.
ஒத்திகை நிகழ்ச்சியில் புல்லரம்பாக்கம் சாா்பு ஆய்வாளா்கள் ரவி, நாராயணமூா்த்தி, ராஜேந்திரன், பொதுமக்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.