திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் மற்றும் கொசுப் புழுக்கள் இருந்த வீடுகள், வணிக வளாகம், உணவகங்களின் உரிமையாளா்களுக்கு இதுவரை ரூ. 3.25 லட்சம் அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாள்தோறும் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. அப்போது, ஒவ்வொரு வீடுகளிலும் டெங்கு குறித்து துப்புரவுத் தொழிலாளா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு சில வீடுகளில் சுகாதாரக் குழுவினா் ஆய்வு செய்தபோது டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில், சுகாதாரக்கேடாக இருந்தது தெரியவந்தது. இதுபோன்று வீடுகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கடந்த 2 மாதங்களாக இதுவரை ரூ.3.25 லட்சத்துக்கு அபராதம் விதித்து, சம்பந்தப்பட்ட வீடுகள், உணவகங்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. அதன்பேரில், இதுவரை ரூ.1.47 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள அபராதத் தொகையை விரைவாக வசூலிப்பதற்கு சுகாதாரக் குழு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தாா்.