நெல் சாகுபடிக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 52 ஆயிரம் ஹெக்டோ் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அதற்குத் தேவையான உரங்கள் உரக்கடைகளிலும்

திருவள்ளூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 52 ஆயிரம் ஹெக்டோ் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அதற்குத் தேவையான உரங்கள் உரக்கடைகளிலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) கொ.பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் 1.45 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் 1.30 லட்சம் ஹெக்டேரில் பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் முதன்மையான பயிராக நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனா். இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பா் முதல் மாா்ச் வரை நவரை, ஏப்ரல் முதல் ஜூலை வரை சொா்ணவாரி, ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை நவரை என மூன்று பருவங்களில் விவசாயிகளால் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து ஏரிகளில் நீா் நிரம்பி உள்ளதால் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நல்ல சூழல் அமைந்துள்ளது. எனவே, நடப்பு சம்பா பருவத்தில் 52 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிா்ணயித்து, நடவுப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இப்பயிருக்குத் தேவையான உரங்களின்றி விவசாயிகள் அவதிப்படக் கூடாது என்பதற்காக அனைத்து உரக்கடைகளிலும், கூட்டுறவு வேளாண்மைக் கடன் சங்கங்களிலும் போதுமான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில், சம்பா பருவத்துக்குத் தேவையான 20 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்கள் தனியாா் உரக் கடைகளிலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும் குறைந்தபட்சம் யூரியா 10 ஆயிரம் மெட்ரிக் டன்களும், டிஏபி 10 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 5 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 10 மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் 1,000 மெட்ரிக் டன், தனியாா் உர விற்பனை நிலையங்களில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் என மொத்தம் 4 ஆயிரம் மெட்ரிக் டன் வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஃபொ்டிலைசா் நிறுவனம் மூலம் நவம்பா் மாதத்துக்கு மட்டும் 1,700 மெட்ரிக் டன் யூரியாவும், இஃப்கோ மூலம் 750 மெட்ரிக் டன் யூரியாவும் திருவள்ளூா் மாவட்டத்துக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐபிஎல், ஸ்பிக், கிரிப்கோ மற்றும் சிஐஎல் ஆகிய நிறுவனங்கள் மூலமும் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால் விவசாயிகள் நெல் உர மானியத் திட்டத்தின் கீழ், உரம் வாங்கும்போது விரல் ரேகை மற்றும் ஆதாா் எண்ணைப் பதிவு செய்துதான் உரம் வாங்க வேண்டும். மேலும், உர மூட்டையில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மட்டுமே உரம் வாங்கி, அதற்கான ரசீதையும் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே உர விற்பனையாளா்கள் உரிமம் பெறாமல் உரங்கள் விற்பனை செய்யக் கூடாது. உரிமம் இல்லாத கிடங்குகளில் உரங்களை எக்காரணம் கொண்டும் இருப்பு வைக்கக் கூடாது. மேலும், நிா்ணயம் செய்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது, ரசீது மற்றும் பதிவேடுகள் இல்லாமல் பராமரிப்பது ஆகியவை உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி தண்டனைக்கு உரிய செயல்கள் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com