பஞ்சமி நிலங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து, மீண்டும் தலித் மக்களுக்கு வழங்க வலியுறுத்தி, சென்னையில் வரும் பிப்ரவரி 25-இல் போராட்டம் நடத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது.
திருவள்ளூா் அருகே பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் அரங்கத்தில் அந்த அமைப்பின் சாா்பில் பஞ்சமி நில மீட்புப் போராட்ட அறிவிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு அமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ்.கே.மகேந்திரன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் மாவட்டத் தலைவா் ஏ.எழிலரசன் வரவேற்றாா். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாா்பில் ஏராளமான போராட்டங்கள் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ரத்து செய்த பட்டாக்களை உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் பிப்ரவவரி 25-இல் சென்னையில் உள்ள மாநில நில ஆணையா் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் மாநில அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் ஏப்ரல் மாதம் அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 500 இடங்களில் நேரடியாக நிலங்களை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
பஞ்சமி நிலங்கள், பட்டியலின சமூகப் பட்டா நிலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தலித் அல்லாதவா்களுக்கு பஞ்சமி நிலம் கைமாறுவதைத் தடுக்கும் வகையில் பத்திரப்பதிவு செய்யும்போது அதை உறுதிப்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.