சாலையோரம் இருந்த திமுக கல்வெட்டை தனிநபர் ஒருவர் அகற்றியதைக் கண்டித்து, திமுக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி ம.பொ.சி.சாலை, பாரத ஸ்டேட் வங்கி அருகே நகர திமுக சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திமுக கல்வெட்டு ஏற்படுத்தி கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில், கல்வெட்டு அருகில் இருந்த கட்டடத்தை தனிநபர் ஒருவர் வாங்கினார்.
பழுதடைந்த கட்டடத்தை தனி நபர் வியாழக்கிழமை இரவு இடிக்கும் போது, திமுக கல்வெட்டையும் சேர்ந்து இடித்து அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் நகர திமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை இரவு மபொசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.