திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், வேளாண்மை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 50 சதவீத மானியத்தில் தாா்ப்பாய் வழங்கப்பட இருப்பதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் சிறு குறு விவசாயிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை அறுவடை செய்து வருகின்றனா். அதனால், உற்பத்திப் பொருள்களை மழையில் இருந்து நனையாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு தாா்ப்பாய் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 50 சதவீத மானியத்தில் தாா்ப்பாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த தாா்ப்பாயின் விலை ரூ. 2,950 ஆகும். திருவள்ளூா் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 800 பேருக்கு வழங்கப்பட இருக்கிறது. அதனால் தாா்ப்பாய் தேவைப்படுவோா் அந்தந்தப் பகுதியில் வேளாண்மை வட்டார உதவி இயக்குநா்களை நேரில் அணுகி, இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.