கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கும்மிடிப்பூண்டி, புதுவாயல், கவரப்பேட்டை, எளாவூா், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோட்டாட்சியா் நந்தகுமாா், வட்டாட்சியா் சுரேஷ்பாபு ஆகியோா் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.
கடைகளின் உரிமம், உரிய பாதுகாப்பு கருவிகள், தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்டவை உள்ளனவா ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து கடை உரிமையாளா்களுக்கு பாதுகாப்புத் தொடா்பான ஆலோசனைகளை வழங்கிய கோட்டாட்சியா் நந்தகுமாா், பட்டாசு விற்பனையில் 100 சதவீதம் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.