புழல் அருகே குழந்தை, மூதாட்டியின் கழுத்தை அறுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
புழல் லட்சுமிபுரம் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார் (35). இவரது மனைவி பிரியா. இவர்களது மகன் சாய்சரண் (1). பிரியாவின் தாயார் சாரதா (56). இதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுவின் மகன்கள் ஆகாஷ் (21), ஜோ (19).
மஞ்சு மற்றும் இரு மகன்களும் வீட்டை பூட்டிச் செல்லும்போது சாவியை பிரியாவிடம் கொடுத்து செல்வது வழக்கமாம். வியாழக்கிழமை ஆகாஷ், சாரதாவிடம் வீட்டு சாவியை கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ், கத்தியால் குழந்தை சாய்சரண் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க வந்த சாரதாவின் கழுத்தையும் அறுத்தாராம். இதையடுத்து ஆகாஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தகவலறிந்த புழல் போலீஸார் அங்கு சென்று சாரதா, குழந்தையை மீட்டு சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆகாஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.