போஷன் மா திட்டம் குறித்து அரசு மகளிர் பள்ளியில் முளைப்பாரித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசினர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போஷன் அபியான் திட்டம் மூலம், கடந்த, 6-ஆம் தேதி முதல் வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், எடை உறுதி செய்தல், ரத்த சோகை பரிசோதனை முகாம், உணவுத் திருவிழா, முளைப்பாரி விதைகள் வழங்குதல், பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள், பேரணி உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, உதவித் தலைமை ஆசிரியர் ஜெயசந்திரன் தலைமை வகித்தார். பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் சேஷாசலம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சக்கரபாணி வரவேற்றார்.
இதில், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் பழனிசேகர் கலந்துகொண்டு, ஏற்கெனவே பள்ளி மாணவிகளுக்கு வழங்கிய முளைப்பாரி விதைகள் கொண்டு வந்திருந்த மாணவிகளைப் பாராட்டினார்.
அதேபோல் திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் சுமதி தொடக்கி வைத்தார்.
இதில், மாணவர்கள் இயற்கை உணவுகள், தூய்மை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, ஊட்டசத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் குறித்த விளம்பரப் பதாகைகளை கையில் ஏந்தியவாறு, முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.