திருத்தணி அருகே முருகூரில் உள்ள கங்கையம்மன் கோயில் ஜாத்திரை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி நகராட்சி, 21-ஆவது வார்டில் அமைந்துள்ள முருகூர் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கூழ் வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு களிமண்ணால் செய்யப்பட்ட உற்சவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூங்கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெற்றன. விழாவையொட்டி, முருகூர் முழுவதும் வண்ண விளங்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை முருகூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.