திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 1,330 குறள் ஒப்பிக்கும் திருக்குறள் முற்றோதல் போட்டி அக். 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி அக். 11-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
எனவே இதற்கான நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் திறனறிக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது.
இதில் திறனறிக் குழு உறுப்பினரால் தேர்வு செய்யப்பெறும் மாணவ, மாணவிகளின் பெயர்களை திருக்குறள் முற்றோதல் பரிசுக்காக தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும்.
இதில், உலக பொதுமறையாம் திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் முழுமையாக ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து, ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகள் அனைவரும் திருக்குறள் முற்றோதலில் அவசியம் பங்கேற்றுப் பயனடையலாம்.