வாக்காளர் பட்டியலை எவ்விதமான முறைகேடுகளும் இன்றி தயார் செய்யும் நோக்கில் வாக்காளர்கள் தாங்களாகவே இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி வழியாக திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடுதல், தவறு இல்லாமல் தயார் செய்வதற்காக கடந்த 1-ஆம் தேதி 30-ஆம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் இதர விவரங்களை வாக்காளர் பட்டியலில் தாங்களாகவே சரிபார்த்தல், திருத்தங்களை www.nusp.in என்ற இணையதளம், Voter Helpline Mobile App என்ற செயலி, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவற்றில் மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம், வாக்காளர்களின் பெயர், பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவினர் வகை, புகைப்படம், இனம், முகவரி ஆகியவற்றை வாக்காளர்கள் தாங்களாகவே சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அதில் தங்களது குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளும்பட்சத்தில், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை, உழவர் அடையாள அட்டை, அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், சமீபத்திய மின், தண்ணீர், தொலைபேசி கட்டண ரசீதுகளில் ஏதாவது ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், தேவைப்படும் மாற்றங்களின் விவரம் மற்றும் தங்களது கருத்துகளையும் பதிவு செய்யலாம். மேலும், இத்திட்டத்தின் விவரங்களை பொதுமக்கள் குறிப்பாக கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து தேர்தல் தொடர்பு அலுவலர்களும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.