எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள திருக்கண்டலம் கிராமச் சாலை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லை என திங்கள்கிழமை பூச்சிஅத்திபேடு - திருக்கண்டலம் சாலையில் வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல் செய்தனர்.
பெரியபாளையம் அருகே அமைந்துள்ள திருக்கண்டலம், அண்ணாநகர், நெய்வேலி, கல்மேடு ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைக்காக பூச்சிஅத்திபேடுக்கு செல்ல வேண்டியுள்ளது. திருக்கண்டலம்-பூச்சிஅத்திபேடு செல்லும் சாலை பல வருடமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதனை சீரமைக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் திங்கள்கிழமை அவ்வழியாகச் சென்ற வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிடம் இந்த பிரச்னையைப் பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.