புழல் சிறையில் செல்லிடப்பேசிகள் பறிமுதல்
புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்த செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் மத்திய சிறையில் தண்டனைப் பிரிவில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிலர் சிறைக்குள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தி வருவதாக சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறை காவலர்கள் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது இரண்டு ஆயுள் தண்டனைக் கைதிகள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தும்போது பிடிபட்டனர். இதில் கன்னியாகுமரியை சேர்ந்த கேப்ரவேல் (49), தர்மபுரியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(53) ஆகியோரிடம் இருந்து 2 செல்லிடப்பேசிகள், சிம்கார்டுகள், சார்ஜர் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார். புழல் காவல் ஆய்வாளர் தங்கதுரை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.