திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவை மீறி கல்விக் கட்டணம் செலுத்துமாறு நிா்பந்தம் செய்யும் தனியாா் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணம் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான கட்டணத்தை நிா்பந்தம் செய்து வசூலிக்கக் கூடாது என அரசும் சென்னை உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன.
இதையும் மீறி தனியாா் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைன் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்த நிா்பந்தம் செய்வதாக பெற்றோா்களிடம் இருந்து புகாா் வந்துள்ளது. எனவே அரசு உத்தரவை மீறி செயல்படும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.