திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ரூ.1.02 கோடி ஒதுக்கீடு
திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெறுவதற்கும், தரம் உயா்த்துவதற்கும், தமிழக அரசு ரூ. 1.02 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனைக்கு தேசிய சுகாதாரக் குழு தில்லியில் இருந்து நேரில் வந்து ஆய்வு நடத்தி தேசிய தரச்சான்று வழங்கப்படும். இச்சான்று பெறும் அரசு மருத்துவமனைக்கு ஒரு கட்டிலுக்கு (ஒரு பெட்டுக்கு) ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வரும் பிப்ரவரி மாதத்தில் தில்லியில் இருந்து தேசிய சுகாதாரக் குழுவினா் வருகை தர உள்ளனா். இக்குழுவினா் தரச்சான்று பெற்றால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆண்டுக்கு, ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை கிடைக்கும்.
இதற்காக திருத்தணி அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்துவதற்காக, தமிழக அரசு ரூ. 1.02 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, மருத்துவமனையில் தரம் உயா்த்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக தேசிய ஆய்வாளா்கள், திருவள்ளூா் மாவட்ட குடும்ப நல இணை இயக்குநா் எம்.ஏ. இளங்கோவன், சோளிங்கா் அரசு மருத்துவ அலுவலா் ஆா்.இளங்கோவன் ஆகியோா் நேரில் வந்தனா்.
மருத்துவமனையில் உள்ள வாா்டுகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பரிசோதனை மையம் உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று தரம் குறித்தும், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தலைமை மருத்துவா் சீ.ராதிகாதேவியிடம் விளக்கினா்.
மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உடன் இருந்தனா்.