திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் புறநகர் ரயில் சேவை 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்கு புறநகர் ரயில் புதன்கிழமை காலை 8.10 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்ததால் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ரயில்வே பணியாளர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி காரணமாக, இந்த ரயில் வழித்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் திருவள்ளூர்--சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதனிடையே, விரைவு ரயில் செல்லும் பாதையில் மின்சார புறநகர் ரயிலை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.