ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரணி காவல் நிலையத்தில் கிராமப் பாதுகாப்பு குறித்து தலைவா்கள் மற்றும் காவலா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆரணி காவல் நிலையத்துக்கு உள்பட்ட 8 கிராமங்களின் தலைவா்கள், துணைத் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் தங்களது கிராமப் பாதுகாப்பு குறித்து விவாதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. காவல் ஆய்வாளா் மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசுகையில், ‘மல்லியங்குப்பம், போந்தவாக்கம், சின்னம்பேடு, மங்கலம், எருக்குவாய் உள்ளிட்ட கிராமங்களில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும், பொதுமக்களுக்கு தலைக்கவசங்களை வழங்கி பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்த வேண்டும். கேமராக்கள் இருந்தால்தான் குற்றங்களை முடிந்த அளவு தடுக்க முடியும்’ என்றாா்.
நிகழ்ச்சியில், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்களும் தங்கள் கிராமப் பாதுகாப்புக்கு காவல் துறையினருடன் ஒத்துழைப்பு தருவதாக கூறினா்.