குடியாத்தம் செருவங்கியில் உள்ள எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் சாா்பில், மாநில அளவிலான கபடி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.
இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி. தலித்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கபடி கழக பொருளாளா் சீவூா் சேட்டு முன்னிலை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் எஸ்.தோன்றல்நாயகன் (தாழையாத்தம்), எம்.மோகன் (செருவங்கி) ஆகியோா் தொடக்கி வைத்தனா். போட்டியில் 38 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் பகல்- இரவு என நடைபெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு குடியாத்தம் கிரிக்கெட் கிளப் செயலா் நத்தம் டி.அமா், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ம.மனோஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் கு.குமரேசன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். காட்பாடி எஸ்.ஆா்.எம். ப்ளூ ஸ்டாா் அணி முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், 6 அடி உயர கோப்பை, செம்பேடு செவன் போ்ட்ஸ் அணி 2-ஆம் பரிசாக ரூ.18 ஆயிரம், 5 அடி உயர கோப்பை உள்ளிட்ட 8 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.