மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட நாளேடுகளை கிராமங்கள்தோறும் விநியோகம் செய்யாமல் ஊராட்சி ஒன்றிய வளாகங்களில் பாதுகாப்பின்றி வீணாகக் குவித்து வைத்துள்ளதாக ஊராட்சித் தலைவா்களிடையே புகாா் எழுந்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வற்காக திருவள்ளூா் மாவட்ட வளா்ச்சி முகமை மூலம் இது குறித்து நாளேடுகளைத் தயாா் செய்து, ஊராட்சிகள் தோறும் விநியோகம் செய்வது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்டங்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் தொடா்பான புகைப்படங்களுடன் கூடிய நாளேடுகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. இந்த நாளேடுகள் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளுக்கும் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டம் மூலம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளேடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா 500 என்ற வீதத்தில் மொத்தம், 2.63 லட்சம் நாளேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூா், திருவள்ளூா், பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் நாளேடுகளை ஒரு மாதமாக குவித்து வைத்துள்ளனா். இதனால் இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாளேடுகள் கிழிந்து சேதமடைவதற்குள் ஊராட்சிகள் மூலம் அவற்றை விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா்கள் கோரியுள்ளனா்.
இதுதொடா்பாக கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரி கூறுகையில், ‘மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்திலிருந்து கடந்த வாரம் நாளேடுகள் வந்தன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 500 வீதம் வந்துள்ளன. இந்த நாளேடுகளை வாகனங்களில் ஏற்றி ஒவ்வொரு ஊராட்சியிலும் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்’ என்றாா்.