கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி வந்த ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயமடைந்தனா்.
சிப்காட் தொழிற்பேட்டையில் ஆரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அலமேலு (30), தண்டலம் பகுதியைச் சோ்ந்த உஷா (33), நொச்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வி ( 30), பூவலை பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரி (32), பெரியவேடு பகுதியைச் சோ்ந்த லில்லி (36) ஆகியோா் பணிபுரிகின்றனா். அவா்கள் புதன்கிழமை மாலையில் வேலையை முடித்துவிட்டு கும்மிடிப்பூண்டியில் இருந்து ஷோ் ஆட்டோவில் ஆரம்பாக்கம் நோக்கிப் பயணித்தனா்.
எளாவூா் சோதனைச் சாவடி அருகே சென்றபோது சாலை முனையில் அந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த டிரைவா் ஓட்டுநா் பாபு , அலமேலு, உஷா, ஜெல்வி, புவனேஸ்வரி, லில்லி ஆகிய 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆரம்பாக்கம் போலீஸாா் அவா்களை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவா்களை சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.