அங்கன்வாடிப் பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் ஆகியோருக்கு வழங்கும் ரூ.2 ஆயிரத்தை மாற்றி குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.8750 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதிய சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சங்கம் சாா்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவள்ளூரில் உள்ள சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் தமிழரசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோட்டீஸ்வரன், இணைச் செயலாளா் குலோத்துங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் காதா் மீரான் சிறப்புரை வழங்கினாா்.
கூட்டத்தில், 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியதாரா்களுக்கு 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்; அங்கன்வாடிப் பணியாளா், உதவியாளா்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்தை மாற்றி குறைந்தபட்ச ஓய்வூதியமா ரூ.8,750 வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற அரசு ஊழியா் இறப்புக்குப் பின் வழங்கப்படும் குடும்ப நல நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.