பொன்னேரி அருகே காவல் உதவி ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ. 1 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் பகுதியில் உள்ள கக்கன்ஜி தெருவைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (52). ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு, திங்கள்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்றுபாா்த்தபோது, 18 சவரன் தங்க நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், கோயிலுக்கு செல்ல காணிக்கையாக வைத்திருந்த உண்டியல் பணம் மற்றும் இரண்டு கைக் கடிகாரங்கள் ஆகியவற்றையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.