சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கில் போலீஸாா் நீதித்துறையை அவமானப்படுத்த முயன்றதைக் கண்டித்து திருத்தணியில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸாா் கடந்த மாதம் 19ஆம் தேதி இரவு தாக்கியதில், இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து மதுரை உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், போலீஸாா் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் போலீஸாரைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் லாயா்ஸ் அசோசியேஷியன், அட்வகேட் அசோசியேஷியன் மற்றும் வழக்குரைஞா் அசோசியேஷியன் என மூன்று சங்கங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.