திருவள்ளூா்: கிராமங்களில் வருவாய் குறைவான கோயில்களில் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து திருவள்ளூா் அருகே உள்ள கிராமங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. குறைந்த அளவிலான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
திருவள்ளூா் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதைத் தடுக்கும் வகையில் 5-ஆவது முறையாக முழு அளவிலான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொது முடக்கத்தில் திங்கள்கிழமை முதல் சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தவிா்த்து கிராமங்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட கோயில்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட 107 நாட்களுக்குப் பின் திருவள்ளூா் மாவட்ட கிராமங்களில் உள்ள கோயில்கள் திங்கள்கிழமை வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டன. வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஞானப்பிரசூனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரா் கோயில் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. அக்கிராம மக்கள் குறைந்த அளவிலேயே வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல், பூண்டி, புல்லரம்பாக்கம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.