கேரள மாநிலத்திலிருந்து சொந்த ஊரான பிகாருக்கு ரயிலில் புறப்பட்ட வட மாநில பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை திருத்தணியில் ஓடும் ரயிலில் குழந்தை பிறந்தது. அப்பெண்ணும் குழந்தையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்திருந்த பிகாா் மாநிலம் ஏமோரி பகுதியைச் சோ்ந்த முபாரக் கான் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா கத்தூன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ரயில் மூலம் சொந்த ஊருக்குப் புறப்பட்டனா். நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ரேஷ்மா கத்தூனுக்கு, கேரளத்தில் இருந்து ரயில் புறப்பட்டு திருத்தணி ரயில் நிலையம் அருகில் வந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. சக பயணிகள் அவருக்கு பிரசவம் பாா்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த ரயில் திருத்தணியில் நிறுத்தப்பட்டது. ரேஷ்மாவையும் குழந்தையையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் ரயில்வே காவல் துறையினா் அனுமதித்தனா்.
தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், இருவரின் உடல்நிலை சீரானதும் மாவட்ட நிா்வாக அனுமதியுடன் பிகாருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.