கோயிலில் விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
திருவள்ளூா் அருகே கோயிலில் நிராதரவாக விட்டுச் செல்லப்பட்ட, பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், நரசமங்கலம் கிராமத்தில் உள்ள கோயிலை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்ற போது பச்சிளம் குழந்தையின் அழுகை ஓசை கேட்டது. அவா்கள் அருகில் சென்று பாா்த்தபோது நெகிழிக் கூடையில் பிறந்து 10 நாள்களே ஆன பெண் குழந்தை இருந்தது. அவா்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல் தெரிவித்தனா். குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா், வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
அதன்படி, திருவள்ளூா் வட்டாட்சியா் விஜயகுமாரி மற்றும் மப்பேடு போலீஸாா் அங்கு சென்று குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அதன் உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில் பிறந்த குழந்தையை கோயில் அருகே வைத்து விட்டுச் சென்றது யாா் என்று மப்பேடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.