கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 12th March 2020 11:05 PM | Last Updated : 12th March 2020 11:05 PM | அ+அ அ- |

ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையினா் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், திருவள்ளூா் மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் தனஞ்செழியன் தலைமையில் மருத்துவக் குழுவினா் கரோனா வைரஸ் தொடா்பாக பொதுமக்கள், பயணிகளுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
குறிப்பாக கரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள், கண்டறியும் முறைகள், சிகிச்சை, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, கை கழுவும் முறைகள் குறித்து விளக்கினா். மேலும், ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் சுமாா் 70 பேருந்துகளில், சுகாதாரத் துறையினா் நுண்கிருமி நாசினியை தெளித்தனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் கலாதரன், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் மதியழகன், சுகாதார ஆய்வாளா்கள் முஸ்தபா, வினோபா, யுவராஜ் உள்ளிட்ட அலுவலா்கள், பேரூராட்சி அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...