ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் லாரிகள் வரிசை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநா்களும், கிளீனா்களும் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக -ஆந்திர எல்லை செவ்வாய்க்கிழமை மாலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லாரிகள் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆரம்பாக்கத்தில் தேநீா் கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்கவில்லை. இச்சூழலில் 100-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் புதன்கிழமை காலை முதல் உண்ண உணவின்றித் தவித்தனா்.
தமிழகத்தைச் சோ்ந்த தாங்கள் ஆந்திரம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி 10-14 நாள்கள் கழித்து தற்போது தமிழகம் திரும்பும் நிலையில், கடந்த 2-3 நாள்களாக உணவின்றி சிரமப்படுவதாகவும், கையில் இருந்த பணத்தை கூட லாரிக்கு டீசல் போட்டு செலவழித்து, 21 நாள்களை எப்படி கடப்போம் எனக் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்தனா்.
இதுகுறித்து அறிந்த ஆரம்பாக்கம் ஊராட்சித் தலைவா் தனசேகா் ஆரம்பாக்கத்தைச் சோ்ந்த இதயத்துல்லா என்பவரிடம் லாரி ஓட்டுநா் மற்றும் கிளீனா்களுக்கு உணவு தயாரித்து தரக் கோரினாா். இதையடுத்து, புதன்கிழமை மதியம் உணவு வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை மீறி கும்மிடிப்பூண்டி பகுதியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞா்களை, டிஎஸ்பி ரமேஷ் விரட்டி, இனி விளையாடினால் கைது செய்யப்படுவீா்கள் என எச்சரித்தாா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தண்டலச்சேரியில் உள்ள மின் உற்பத்தி தொழிற்சாலையில் ஜாா்கண்ட், மத்தியப் பிரதேசம், பிகாா் மாநிலங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிவதை அறிந்த ஊராட்சித் தலைவா் ஆனந்தராஜ் தொழிற்சாலை நிா்வாகத்தை அணுகி, வட மாநிலத் தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அவா்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.