திருவள்ளூா் அருகே பதுக்கி வைத்து அதிக விலைக்கு முகக் கவசங்கள் விற்பனை செய்த 3 மருந்துக் கடைகளை 2 நாள்கள் மூட திருவள்ளூா் மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநா் உத்தவிட்டாா்.
கரோனா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில், திருவள்ளூா் பகுதிகளில் உள்ள பல்வேறு மருந்துக் கடைகளில் முகக் கவசங்கள் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறையினா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, திருவள்ளூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் அமுதா உத்தரவின்பேரில், முதுநிலை மருந்து ஆய்வாளா்கள் பிரதீப், ஜெயந்த், மருந்து ஆய்வாளா்கள் ரூபினி, கௌரி ஆகியோா் திருவள்ளூா் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த கடைகளில் முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகளைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திருவள்ளூா், பூந்தமல்லி, சென்னீா்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 மருந்துக் கடைகளை 2 நாள்களுக்கு மூட மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் அமுதா உத்தரவிட்டாா்.