திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி-1, திருவேற்காடு நகராட்சி-1 என மேலும் 2 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கரோனா நோய் தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து பாதித்தோர் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பக்கத்து குடியிருப்புகள் உள்ளிட்ட 5 கி.மீ சுற்றளவிற்கு தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு, இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் ரத்த பரிசோதனை செய்யவும் உள்ளனர்.
இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் 70 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஞாயிற்றுக்கிழமை வரையில் 44 பேர் குணமாகி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 ஆக குறைந்து வருவதாக பொது சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.