பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் 56 நாள்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டபோதிலும், பொதுமக்கள் அதிகம் வருகை தராததால் வியாபாரம் இல்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்தகம், பால் மற்றும் உணவகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. மளிகை, காய்கறிக் கடைகளும் மூடப்பட்டிருந்ததால், பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மளிகை, காய்கறிகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனா்.
இந்நிலையில் பொது முடக்கத் தளா்வு காரணமாக பொன்னேரி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. எனினும், பேருந்து சேவை இல்லாத காரணத்தால், கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நகருக்குள் வர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கடைகள் திறக்கப்பட்ட நிலையிலும் போதிய வியாபாரம் இல்லை என்று பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.